சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.
இங்கு `நாதம், விந்து` என்றது, அபர நாத விந்துக்களை. எனவே, பரநாத விந்துக்களை விதந்திலர் என்க. அபர விந்துவினின்றும் சதாசிவர் தோன்றுவர். அவரிடமிருந்து `மகேசுரர், உருத்திரர், மால், அயன்` என்பவர் முறையே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவரும் முறையே, `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் பூதங்கட்குத் தலைவராவர். சதாசிவன் முதலிய ஐவர்க்கும் உரிய சத்திகள் முறையே மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பவராவர். இச்சத்திகளெல்லாம் அபர விந்து முதலிய சத்தி பேதங்களினின்றே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். இங்குக் கூறப்பட்ட உருத்திரன், மால், அயன் என்னும் மூவரும் சிவனின் வேறானவர் அல்லர்; சிவன் தானே கொள்ளும் நிலைகளாம். இவ்வாறு சிவன் தானே பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவும், பெயரும், தொழிலும் கொண்டு நிற்றல் `சம்பு பட்சம்` எனப்படும். புண்ணிய மிகுதியால் இந்நிலைகளை ஆன்மவருக்கத்துட் பட்டவருக்கும் முதல் வன் வழங்குதல் உண்டு. அவை `அணுபட்சம்` எனப்படும். அணுபட்ச சம்புபட்சங்களைக் கூறுமிடத்து, `மகேசுரனுக்குக் கீழ் சம்புபட்சம் இல்லை; உருத்திரனுக்கு மேல் அணுபட்சம் இல்லை என்பவரும், சம்புபட்சம் எல்லா நிலைகளிலும் உண்டு என்பவரும், `எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு` என்பவருமாகப் பலதிறத்தர் ஆசிரியர். அவருள் எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு என்பவரது கொள்கையே இந்நாயனாரது கருத்தாகத் தெரிகின்றது.
சார் வத்து - சார்பாய பொருள்; தலைமைப் பொருள். இதன் பின் `ஆக` என்பது எஞ்சிநின்றது. சார்த்துமான் - துணையாக உடன்வைத்து எண்ணப்படுகின்ற பெண்; துணைவி.
சதாசிவமூர்த்தி ஞானம், கிரியை இரண்டும் சமமாய் நிற்கும் நிலையினர். இவர் தோற்றுவித்து இடமாகக் கொள்ளும் தத்துவம் சாதாக்கியம். இது மேற்கூறிய அபரவிந்துவிலிருந்து தோன்றுவதாம். ஞானம் குறைந்து, கிரியை மிகுந்திருப்பதே மகேசுர நிலை. மகேசுரன் சாதாக்கியத்திலிருந்து ஈசுர தத்துவத்தைத் தோற்றுவித்து அதனைத் தனக்கு இடமாகக் கொள்வான். கிரியை குறைந்து ஞானம் மிகுந்த நிலையில் சிவன் வித்தியேசுரன் என நின்று, ஈசுர தத்துவத்திலிருந்து `சுத்த வித்தை` என்ற தத்துவத்தைத் தோற்றுவித்து அதன்கண்ணே `உருத்திரன், மால், அயன்` என மூன்று நிலைகளில் நிற்பன். அதனால், வித்தியேசுரனை வேறு வைத்து எண்ணுதல் இல்லை.
இதுகாறும் கூறிவந்தவாற்றால், பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சிவபேதம் ஏழும், `பரவிந்து, அபரவிந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எனச் சத்திபேதம் ஏழும் ஆதல் விளங்கும். எனினும், பரநாதத்திலிருந்து அபரநாதம் தோன்றாமல், இடையே பரவிந்து தோன்ற, அதினின்றே அபரநாதம் தோன்றுதலானும், அவ்வாறே அபரநாதத்திலிருந்து சதாசிவன் தோன்றாமல், இடையே அபரவிந்து தோன்ற, அதினின்றே சதாசிவன் தோன்றுதலானும், பர அபர விந்துக்களாகிய சத்தி பேதங்களையும் சிவபேதமாகக் கூட்டி எண்ணி, `சிவபேதம் நவந்தருபேதம்` என்கின்றன ஆகமங்கள். அதனையே சிவஞானசித்தி (சூ. 2.74) நூல்,
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; உருவம்நால்; இங்கருவம்நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
எனக் கூறிற்று. இதனுள், `பரநாதம், பரவிந்து, அபரநாதம், அபரவிந்து, என மேலே உள்ள நான்கும் அருவத் திருமேனிகள்` என்பதும், `மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனக் கீழே உள்ள நான்கும் உருவத் திருமேனிகள்` என்பதும், `இடையே உள்ள சதாசிவமூர்த்தம் ஒன்றும் அருவுருவத்திருமேனி` என்பதும் கூறப்பட்டவாறு அறிக. அருவுருவத் திருமேனி என்பதே மேல் கூறப்பட்ட இலிங்க வடிவம். எனவே, சதாசிவ மூர்த்தமாவது இலிங்க வடிவமே என உணர்க.
இதனால், சுத்த மாயையில் நிகழும் படைப்புக் கூறி முடிக்கப் பட்டது.